Total Pageviews

Wednesday 17 September 2014

விண் மதியே


உனக்கு என் தோழமை வந்தனம்
நீ
எனதருமை சாலையோர பாட்டாளி
குடில்களின் சோடியம் விளக்கு
நீ
கடலில் வாழ்வைத் தேடும் மீனவத்
தோழருக்கு நட்பான காலக்கடிகை
நீ
காலம்காலமாய் குழவிப் பருவத்தின்
தொலைதூர நண்பன்
நீ
இம் மானுடத்திற்கோர் தத்துவஞானி
ஏன்என்றால்
குருவிடம் தாம்கற்ற கல்விதனை
கற்றோர்சபைதனில் தருணத்தில்
உரைத்து வெல்வதுபோல்
பகலவனின் ஒளிதன்னை
திறம்படவே உள்வாங்கி
இரவுப் பொழுதினில்
இனிமையாய் மிளிர்வதால்’.....
நீ
மதநல்லிணக்கத்தின் முதல்படி
அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும்
ஓர் உறவுப்பாலம்
நீ
எட்ட இருந்தாலும் வெற்றாய் இருப்பதனால்தான்
உன்னை இன்றுவரை எம் மக்கள்
பத்திரப்பதிவு செய்திடாமல்
பால்வெளியில் விட்டுவிட்டனர்
எட்டஇருந்தாலும் ஒட்டியநட்பினைப்போல்
மனம்கனத்த நேரமெல்லாம்
மயில் இறகால் மனம் வருடும்
உன்
தோழமைக்கு என்வணக்கம்


ச.பாலசுப்பிரமணிய பாரதி.